

இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்று செயல்படுத்தி உள்ளன:
பீகார்: மூன்றாவது மொழி பெங்காலி, உருது, ஒடியா, சமஸ்கிருதம்.
உத்தரப்பிரதேசம்: மூன்றாவது மொழி பெங்காலி, பஞ்சாபி, பஹாடி, சமஸ்கிருதம்
ஹரியானா: மூன்றாவது மொழி பஞ்சாபி, சமஸ்கிருதம், பஹாடி
ஹிமாச்சல்: மூன்றாவது மொழி பஞ்சாபி சமஸ்கிருதம்
மத்தியப்பிரதேசம்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், குஜராத்தி, மராத்தி
சத்தீஸ்கர்: மூன்றாவது மொழி சமஸ்கிருதம், ஒடியா, தெலுங்கு
ஜார்கண்ட்: மூன்றாவது மொழி பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம்
இந்தி தாய்மொழியாக இல்லாத மாநிலங்களும் மும்மொழி முறையை அமல்படுத்தியுள்ளன.
மகாராஷ்டிரா: மூன்றாவது மொழி இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், கொங்கனி
கோவா: மூன்றாவது மொழி மராத்தி, கன்னடம், ஹிந்தி, சமஸ்கிருதம்
கர்நாடகா: மூன்றாவது மொழி தெலுங்கு, கொங்கனி, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி.
கேரளா: மூன்றாவது மொழி தமிழ், கன்னடம், கொங்கணி, இந்தி, சமஸ்கிருதம்
தெலுங்கானா: மூன்றாவது மொழி மராத்தி, இந்தி, கன்னடம், சமஸ்கிருதம்
ஆந்திரா: மூன்றாவது மொழி ஒடியா, இந்தி, தமிழ், கன்னடம், சமஸ்கிருதம்
அனைத்து மாநிலங்களும் கற்பிக்க வேண்டிய பட்டியலில்
(1) தாய்மொழி
(2) ஆங்கிலம்
(3) அண்டை மாநில மொழி அல்லது ஹிந்தி, சமஸ்கிருதம் விருப்ப மொழியாக இருக்கலாம்.
மூன்றாவது மொழி இந்தியாகத்தான் இருக்க வேண்டும் எனும் அவசியமில்லை.
இந்தி அல்லது வேறு எந்த மொழியையும் அறியாததற்காக எந்த மாநிலமும், இனமும் அல்லது நபரும் ஒதுக்கி வைக்கப்படக்கூடாது.
மக்கள் தங்கள் விருப்பப்படி அதிக மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.
இதுவே மும்மொழி கல்விக்கொள்கை.

வளர் இளம் மாணவன்மூன்றாவதாக ஒரு மொழி கற்றுக்கொள்வது எந்தவகையில் திணிப்பாகும்?
ஏற்கனவே படிக்கும் பாடங்களோடு பிற மொழி ஒன கை தேதேர்வு செய்வது எப்படி அவனுக்கு பாரமாகும்?
நம் தமிழ் மாணவர்களின் அறிவுத்திறனை எதற்காக குறைகுறைத்து மதிப்பிட வேண்டும்?
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்கிறார் வள்ளுவர். மேலும்…..
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை என்று தொடர்கறார்.
அதுமட்டுமின்றி……
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
என்கின்ற குறளின் விளக்கமாக முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி கூறுகிறார்…..
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
– எனும் பாரதி பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது. யாரேனும் இந்தப் பாடலை இதுவரை அறிந்திருக்கவில்லை எனில், தயவுசெய்து முழுமையாக ஒருமுறை அந்த முண்டாசுக் கவிஞன் இந்தப் பாடல் வழியாக அப்படி எதைக் கடத்த முனைந்திருக்கிறார் என்று பார்த்து விடுவது உத்தமம். ஏனெனில், நாம் பாரதியைக் கொண்டாடும் மனநிலையில் இருக்கையில் அவரது கருதுகோள்களுக்கும் செவி சாய்க்கக் கடமைப்பட்டவர்கள் தானே!
பாரதியின் கூற்றுப்படி ‘நாம் தமிழர்கள்’,‘நமது மொழி தேமதுரத் தமிழ்’ என்ற பெருமையோடு தலை நிமர்ந்து வாழும் உரிமை நமக்குண்டு. அதே வேளையில் அரசியல் உள்நோக்கங்களுடன் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டும், கிணற்றுத்தவளைகளாகவும் சொந்தப் பெருமை பேசிக் கொண்டு இன்னும் எத்தனை நாட்கள் காலம் தள்ள முடியும்?
எந்த ஒரு அரசியல் போராட்டமும் மக்கள் முன்னேற்றத்துக்கான, சமுதாய மறுமலர்ச்சிக்கான தூண்டுகோலாக மட்டுமே இருக்கவேண்டுமே தவிர, ஒரு தலைமுறை மக்களின் ‘புதியன கற்கும் திறனையும், முயற்சிகளையும்’தடை செய்யக்கூடியதாக இருந்து விடக்கூடாது என்பதற்கு நமக்கு வேறு உதாரணங்கள் தேவையில்லை. நமது மூத்த தலைமுறையினரைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். தமிழகத்தின் திராவிடக் கழகம் முன்னெடுத்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களைப் பற்றி. போராட்டம் நடந்த காலகட்டத்தில் அன்றிருந்த அரசியல் சூழல் காரணமாக அது நியாயமான நோக்கத்திற்காகவே இருந்திருக்கலாம். ஆனால், இன்று காலம் மாறி விட்டது. அன்று இந்தியை எதிர்த்தவர்களே கூட பின்னாளில் தங்களது அடுத்த தலைமுறையினர் இந்தி கற்க நினைத்த போது தடுத்து விட்டார்களா என்ன? கிடையாது.
ஆக, இங்கே பிற மொழி கற்றல் என்பது தனிமனித சுதந்திரம் என்பதை அவர்கள் மிக நன்றாகவே உணர்ந்து கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். இங்கே பலிகடாக்கள் ஆக்கப்பட்டவர்கள் கட்சி சார்ந்த கொள்கை வெறியோடு தன் எதிர்காலத் தேவைகளை உணர மறந்த அப்பாவி பொது ஜனம் தான்.
சர்வதேச அளவில் தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டுமெனில் நாம் தமிழில் மட்டுமே முழங்கிக் கொண்டிருந்தால் போதுமா என்ன? அந்த மகாகவியின் கவிதை வரிகளுக்கேற்ப, தமிழ்மொழியின் பெருமையை உலகோர்க்கு எடுத்தியம்ப நாம் பிற மொழிகளையும் அறிந்தவர்களாய் அல்லவா இருந்திட வேண்டும்?! அந்த வாய்ப்பை அரசே இலவசமாக தமிழ் கற்கும் ஆய்வு மாணவர்களுக்கு உண்டாக்கித் தருகிறது எனும் போது அந்த முயற்சியை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை தடுக்காமல் இருக்க வேண்டுமா இல்லையா?
இங்கே பிற மொழி கற்றல் என்பது நம் தாய்மொழிக்கான ஆபத்தாக ஏன் கருதப்பட வேண்டும்?
அது நமது சிந்தனை தடுமாற்றமே அன்றி வேறென்ன? ஒரு மொழியைக் கற்றுக் கொள்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. மொழி சார்ந்த ஈடுபாடு, அதைத் தடையின்றிப் பேசவும், எழுதவும் மேற்கொள்ள வேண்டிய இடைவிடாத பயிற்சிகள் என்று கற்றலுக்கும் அதைக் கைக்கொள்ளலுக்கும் நடுவே பல படிகள் இருக்கின்றன.
இன்று நம்மிடையே ஆரம்பப் பாடசாலையில் இருந்து மேல்நிலைக்கல்வி வரை இந்தியையும், பிரெஞ்சையும், சமஸ்கிருதத்தையும் இரண்டாம், மூன்றாம் மொழியாகக் கொண்ட எத்தனை மாணவர்கள் பிற்காலத்தில் தங்கு தடையின்றி அந்தந்த மொழிகளில் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்? என்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் முக்கால்வாசிப் பேருக்கு முறையாக அந்தந்த மொழிகளைப் பேசத்தெரிந்திருக்காது, எழுதத் தெரிந்திருக்காது என்பதே நிதர்சனம். ஆக, கடமைக்கு ஒரு மொழியைக் கற்பதற்கும், விரும்பி ஒரு மொழியைக் கற்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன
விரும்பிக் கற்பவர்களால் நிச்சயம் தம் தாய்மொழிக்கு எந்தக் குந்தகமும் விளைவித்துவிட முடியாது. அவர்கள் இங்கிருக்கும் நல்ல விஷயங்களை தாம் கற்றுக் கொண்ட புதிய மொழியிலும் கடத்த விரும்புகிறவர்களாக இருப்பார்கள். அதற்கு நமது மகாகவி பாரதி, ஜி.யு.போப். கால்டுவெல், வீரமாமுனிவர் என்று நம்மிடையே பல உதாரணர்கள் இருக்கிறார்கள்.
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பித்தல் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்தி பிரச்சார சபா குறித்தது. அவர்கள் என்ன நமக்கு கற்பிப்பது? என்ற நோக்கில் இதை எதிர்கட்சிகள் கையாளுகின்றனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இது பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் எனும் சொல்வழக்குக்கு ஏற்றார் போலிருக்கிறது. சில அரசியல் கட்சிகள் இந்தி பிரச்சார சபா மீது கொண்ட ஒவ்வாமையானது தற்போது அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களின் மீதான வெறுப்பாக மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்றைய மாணவர்களின் தலையாய பிரச்சினைகளில் ஒன்று தரமான ஆசிரியர்கள் கிடைப்பதென்பது. அப்படி தரமான ஆசிரியர்கள் கிடைத்து, அவர்களை அரசே ஏழை மாணவர்களுக்கு பிற மொழி கற்றுக் கொள்ள நியமிக்கிறது என்றால் அதை எதிர்க்கட்சிகள் எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?
தொழில்நுட்ப வளர்ச்சிகள் அசுர வேகத்தில் மறுமலர்ச்சி அடைந்து வரும் இந்தக் காலத்தில் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தெரிந்தவர்களாக இனி நம்மால் காலம் தள்ளி விட முடியுமா?!
நீங்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, இங்கேயே சொற்ப சம்பளத்தில் ஏதோ கையடக்கமாய் ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து முடித்து விடத் தீர்மானித்தவர்கள் எனில் உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம். ஆனால், எதிர்காலத் தலைமுறையினர் நிச்சயம் உங்களை கேள்வி கேட்பார்கள். அதிலிருந்து உங்களால் தப்பவே முடியாது.
இன்று எந்தத்துறையாக இருந்தாலும் பிறமொழி தெரிந்தவர்கள் எனில் உங்களுக்கான வேலை வாய்ப்பில் 30% முன்கூட்டியே உறுதி செய்யப்பட்டு விடுகிறது என்பதை நினைவில் வையுங்கள். அது எந்த மொழியாக இருந்தாலும் சரி.
இந்தி வடமொழி, சமஸ்கிருதம் பார்ப்பண மொழி என்று மொழி சார்ந்த வெறுப்பை உமிழ்பவர்கள் கூட தம் பிள்ளைகளின் பள்ளிக்கூட பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்புகளில் தத்தமது பிள்ளைகளின் ஆசிரியப் பெருமக்களிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடிக் களிக்கிறார்கள். அதனால் அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதில்லை. இன்னும் கேளுங்கள்… இரு நண்பர்கள் குடும்பத்துடன் பீச்சிலோ, பார்க்கிலோ, இல்லை ஹோட்டல்களிலோ அகஸ்மாத்தாய் சந்தித்துக் கொள்ள நேரும் போது கூட நாம் உரையாடலுக்கு உடனடியாகத் தேர்ந்தெடுப்பது ஆங்கிலத்தைத் தான் என்பதை எவரேனும் மறுக்க முடியுமா? இதில், இன்னும் வேடிக்கை என்னவென்றால், சிலருக்கு ஆங்கிலம் இலக்கண சுத்தமாக பேசத் தெரிந்திராத போதும், எதிரிலிருக்கும் நபருக்கு தமிழ் மிக நன்றாகத் தெரியும் என்ற போதும் கூட நமது உரையாடல் மொழியாகப் பல நேரங்களில் ஆங்கிலமே முதலிடம் பெறுகிறது என்பது தான்.
இப்படியெல்லாம் நம்மைச் சுற்றி மொழி சார்ந்த வேடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அரசியல் கட்சிகள் எதை ஆதாரமாகக் கொண்டு பிற மொழி கற்றலை எதிர்க்கின்றன என்று புரியவில்லை. யாரை முட்டாளாக்கும் எதிர்ப்பு இது?!
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்பது தமிழர்களின் வாழ்வியல். பாண்டியன் அரசவையில் ரோமானியப் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர்; ரோமானிய அரசவையில் தமிழர்கள் இருந்தனர் என்பதை நெஞ்சு நிமிர்த்திப் பெருமையுடன் ஒவ்வொரு தமிழரும் சொல்லிக் கொள்கிறோம். அதன் உள்ளிருக்கும் பொருள், தமிழ் ரோமானியத்தை ஏற்றது. அதனால் ரோம் வரை தமிழ் சென்றது. இப்படி அரவணைத்து நட்பு பாராட்டி தமிழை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர்கள் நமது மூதாதையர்கள்.
தமிழின் ஆகச் சிறந்த படைப்பாளர்கள் பன்மொழி வித்தகர்கள். சங்க இலக்கியத்தில் கபிலர் பன்மொழிப் புலவர், ஆரிய அரசன் பிரஹத்தனுக்குத் தமிழ் கற்பிக்கவே குறிஞ்சிப் பாட்டைத் தந்தார். கம்பர் தனது பன்மொழிப் புலமையின் ஆற்றலால் தந்த கம்பராமாயணம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் இன்றைக்கும் கொண்டாடப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அறிஞர்கள் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (தெ.பொ.மீ) பதினெட்டு மொழிகள் அறிந்தவர். கா.அப்பாத்துரையார், தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் புலமை கொண்டவர். ஜெர்மன், கிரேக்கம் உள்ளிட்ட பத்து மொழிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு உலக இலக்கியங்கள் என்ற நூலை இயற்றியவர்.
மு.கு.ஜகந்நாத ராஜா இந்திய மொழிகளில் தமிழின் சிறப்பை நிலைநாட்டியவர். தெலுங்கு, மலையாளம், கன்னடம், சம்ஸ்கிருதம், பிராகிருதம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கவிகளை இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தவர். திருக்குறள், புறநானூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றை தெலுங்கிலும், முத்தொள்ளாயிரத்தை மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளார். தமிழ்மொழியின் பெருமை வளர வேண்டுமானால் தமிழருக்குப் பன்மொழி அறிவு அவசியம்.
ஒரு மொழியின் இலக்கியத்தைச் சிறந்தது எனச் சொல்ல வேண்டுமானால் பிற மொழி இலக்கியங்கள் குறித்த அறிவும் சிறப்பெனக் குறிப்பிடும் இலக்கியத்தின் மொழியில் நுண்மாண் நுழைபுலமும் பெற்றிருக்க வேண்டும்.
பிறவற்றை அறியாமலோ தன்னுடையதை முழுமையாக உணராமலோ புதிய தடங்களைக் காண முடியாது’ என்று தெ.பொ.மீ அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தமிழக அரசியலில் பல காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மொழி அரசியல் மேற்சொன்ன செய்திகளைப் பேசுவதில்லை.
“தமிழகம் இருமொழிக் கொள்கையைப் பின்பற்றுகிறது. அது தமிழ்நாட்டின் தமிழர்களின் விருப்பம்’ என்று சொல்லப்படுகிறது. இதுவே தமிழர் மரபுக்கு எதிரானது. கடலோடிகளான தமிழர்கள் மொழிகளைக் கற்கும், ஏற்கும் ஆர்வம் உடையவர்களாக இருந்தனர்.
மகாத்மா காந்தியடிகள் ஏற்படுத்திய ஹிந்தி பிரசார சபாவில் தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து ஹிந்தி படிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருக்கிறது. தொழில் நிமித்தம் காரணமாக பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, சீன மொழி என உலக மொழிகளைக் கற்பதிலும் ஆர்வம் காட்டுவோரும் இருக்கின்றனர்.
தேசிய கல்விக்கொள்கையை ஏற்பது தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், உண்மைகளை அலசுவது கட்டாயமாகிறது. ஹிந்தி திணிப்பு என்ற சொல்லும் அரசியலும் தமிழகத்துக்குப் புதிதல்ல. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஹிந்தி என்ற சொல்லைக் கூடப் பயன்படுத்தவில்லை. மும்மொழிக் கொள்கையில் மூன்றாவது மொழி ஏதேனும் ஓர் இந்திய மொழி என்கிறது.
ஹிந்தி திணிப்பு என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு மொழித்திணிப்பு என்ற சொல் இப்போது களத்திற்கு வந்திருக்கிறது. நமக்கு ஹிந்தி ஆதிக்கம், திணிப்பு என்பதல்ல பிரச்னை. எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் அல்லது மத்திய அரசு சொல்வது எதுவாயினும் எதிர்ப்போம் என்பதே நிலைப்பாடு. இந்திய மொழிகளில் எதனையும் ஏற்க மாட்டேன் என்பது பிரிவினைவாதத்துக்கான கருத்து. இது தமிழர்களுக்கு எவ்விதத்தில் பயன்படும்?
தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கை என்பதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. முதல் மொழி அவரவர் தாய் மொழி என்கிறது. நம் பிள்ளைகள் நமது தாய் மொழியில் கல்வி கற்பதை நாம் எதிர்க்கிறோமா?
மூன்றாவது மொழியாக ஏதேனும் ஓர் இந்திய மொழி எனக்குத் தேவையில்லை; அது எங்கள் உரிமை என்று பேசும்போதே ஏனைய இந்திய மாநிலங்களும் நம்மைப் பின்பற்றி தமிழை அப்படிச் சொல்லத் தொடங்கினால் அது நமக்குப் பெருமையாகுமா? நமது நிலைப்பாடு இந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் எதிரானதாகாதா?
ஒருவருக்கொருவர் எனது மொழியை ஏற்காதவர் என்ற காழ்ப்புணர்வை வளர்த்துக் கொள்வது சரியா? அல்லது இணக்கத்துடன் நாடு முழுவதும் தமிழும் தமிழ்நாட்டில் பிற இந்திய மொழிகளும் என்று பரிவர்த்தனை செய்துகொள்வது சரியா? தமிழின் தொன்மையை- பெருமையை தேசமெங்கும் கொண்டு சேர்ப்பது நமது கடமை எனில், இந்த மூன்றாவது இந்திய மொழியை ஏற்பது அதற்கான சரியான வழிதானே…ஏன் எதிர்க்க வேண்டும்?
மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கான சுமையை ஏற்றுவதாகும் என்ற கருத்து மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது. மூளையின் செயல்பாடு ஆர்வத்துடன் எதனையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. குழந்தைகள் ஒரு மொழி-இரு மொழி என்றில்லை, ஒரே நேரத்தில் பல மொழிகளை எளிதாகப் புரிந்துகொண்டு கற்கும் திறனுடன் நினைவாற்றலும் கொண்டவர்கள் என்கிறது அறிவியல்.
தமிழகத்தில் ஒரு மொழியைக் கற்பது சுமை, தேர்வு எழுதுவது சிரமம் என்றெல்லாம் தொடர்ந்து பேசப்படுவது மாணவர்களின் மனதில் பெரிய அளவில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. நமக்கு மொழி கற்பது சிரமம் சுமை என்று தொடர்ந்து சொல்லச் சொல்ல, அதை இன்றைய தலைமுறைக் குழந்தைகள் நம்பவும் தொடங்கிவிட்டனர். விளைவு, தமிழகத்தில் தமிழ் மொழியில்கூடத் தேர்ச்சி பெற முடியாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
ஒரு மொழியைக் கற்பதன் பயன் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறித்தது மட்டுமல்ல. அது மனிதனின் மனவளம், சிந்தனை, ரசனை சார்ந்ததும் ஆகும். வளர்ந்துவரும் மனஅழுத்தப் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் அமையலாம். மொழியும் இலக்கியமும் மனித வரலாற்றின் அற்புதங்கள். அவற்றைத் தேவையில்லை என்று தள்ளுவது அறிவுடைமையாகாது.
“சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம்’ என்ற கோட்பாட்டை நம்பும் நாட்டில், கல்வி அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். தாங்கள் விரும்பும் மொழியைப் படிப்பதற்கான சுதந்திரம் வேண்டும். அதன்மூலம் சகோதரத்துவம் போற்றப்பட வேண்டும். வசதி உடையவர்கள் விரும்பியதைக் கற்றுக்கொள்ளலாம். வசதி இல்லாதவர்கள் கற்க உரிமையில்லை என்ற நிலைப்பாடு அரசமைப்புச் சட்டத்துக்கே விரோதமானது. அரசியல்வாதிகளின் மகன் விரும்பினால் எந்த மொழியும் கற்றுக்கொள்ள முடிகிறது; ஓர் ஏழை மாணவனுக்கு அது சாத்தியமில்லை என்பது எவ்விதத்தில் சமத்துவம்?
கற்கும் வாய்ப்புடையவர்களை விமர்சிப்பது நமது நோக்கமல்ல; ஆனால், கடைக்கோடியில் இருக்கும் குழந்தை வரை அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். உருது மொழி கற்றுக் கொடுக்கும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன. வரவேற்கிறோம். தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், சம்ஸ்க்ருதமும், வங்காளமும் என இன்னும் வாய்ப்புகளை விஸ்தரிப்பதில் என்ன தவறு?
திணிப்பு என்ற சொல்லில் அர்த்தமில்லை. தேசிய கல்விக்கொள்கை மூன்று மொழிகள் குறித்துப் பேசினாலும், மூன்றாவது மொழியை மாணவர்கள் மீது அரசு திணிக்க முடியாது என்பதற்கும் வழிவகை செய்துள்ளது
மாணவர்களின் விருப்பம், பெற்றோர் ஆசிரியர் அமைப்புகள் தரும் விருப்ப முறையீடுகள் என மாணவர்கள் பெருமளவில் விரும்பும் மொழியை மட்டுமே பள்ளியில் வழங்க முடியும். எந்த மொழியையும் அரசு கட்டாயப்படுத்த முடியாது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதால் நமது மாணவர்களுக்கான கல்வித்தரம் மேம்படுமேயன்றி குறைவுபடாது. ஏற்கெனவே தமிழகத்தில் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை அனைவருக்குமாக விரிவுபடுத்துவதில் தவறில்லை.
மொழிக் கொள்கை என்பது இங்கே கட்சிகளின் சித்தாந்தம் மட்டுமே. மக்களின் நலனுக்காகத்தான் அரசு; கட்சிகளின் சித்தாந்தத்துக்காக அல்ல. மாறிவரும் சூழலில் உலகத் தரத்திற்குக் கல்வியை நாமும் உயர்த்திக் கொள்ள வேண்டும். இன்றைய ஒவ்வொரு மாணவரின், பெற்றோரின் விருப்பங்களை அறிந்துகொள்ள வேண்டிய காலமும் கட்டாயமும் வந்திருக்கிறது. 1960-களில் மேற்கொண்ட மொழிக்கொள்கையை இன்றைக்கும் பிடித்துக் கொண்டு நிற்பது ஏற்புடையதல்ல.
மாநில அரசுப் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகள் எனப் பாகுபாடின்றி அனைத்துப் பள்ளிகளும் சமமான தரத்தில் கல்வியை வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே அடுத்த தலைமுறைகளுக்கான நமது கடமை. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இணக்கமான போக்கைக் கையாள்வதை விடுத்து அரசியல் செய்வது சரி அல்ல.
