
திருப்பராய்த்துறை ஊராட்சியில் தேசத்துரோக செயல்! 82ஆண்டுகளாக வரி ஏய்ப்பு?
4ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை!
தூங்கும் ஊராட்சி நிர்வாகத்திற்குச் சாட்டையடி!
“உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்…” – போர்டில் மட்டும் தானா?
“உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்; எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக்கூடாது!” திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உள்ள ராமகிருஷ்ண தபோவன நிறுவனங்களின் எல்லா இடங்களிலும், பள்ளி வளாகங்களிலும்,கம்பீரமாக எழுதி வைக்கப்பட்டுள்ள உன்னதமான வாசகம் இது.
தபோவனம் மக்களுக்குப் பல நல்ல விஷயங்களையும், சிறந்த தொண்டுச் சேவைகளையும் செய்து வரும் ஒரு மிகச்சிறந்த அமைப்பு என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், இத்தகைய அறநெறி பேசும் ஒரு பெரிய நிறுவனத்திடம், கடந்த பல ஆண்டுகளாக வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரி என எந்தவொரு அடிப்படை வரியையும் வசூலிக்காமல் கோட்டை விட்டிருக்கிறது திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகம்!

இங்கே தவறு செய்வது தபோவனம் அல்ல; அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திருப்பராய்த்துறை ஊராட்சி நிர்வாகமும், அங்கு பணிபுரியும் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி தலைவர்களும்தான்! அவர்கள் வரி கேட்டால் கொடுப்பதற்குத் தபோவனம் தயாராகவே இருக்கிறது.
இராணுவ சேவைக்குச் சமமான வரிப்பணம்… இங்கே நடப்பது தேசத்துரோகமில்லையா?
மக்கள் கட்டும் வரியில்தான் ஒரு நாடு வளர்ச்சி பெற முடியும். வரி ஏய்ப்பு செய்வது என்பது தேசத் துரோகம் ஆகும். வரி செலுத்துவது என்பது எல்லையில் நின்று இராணுவத்தில் பணிபுரிவதற்குச் சமமானது. ஏன் தெரியுமா? நாம் செலுத்தும் வரியில்தான் இராணுவத்திற்குத் தேவையான தளவாடங்களை வாங்க முடியும், சாலைகள் போட முடியும், பாலங்கள் கட்ட முடியும்; நாட்டின் வளர்ச்சியில் நாம் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

அப்படி இருக்கையில், இத்தனை பெரிய தொண்டு நிறுவனத்திடம் வரியே வாங்காமல் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் செயல் இல்லையா?
4 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை!
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னாலேயே, ஊராட்சி கணக்குகளைத் தணிக்கை செய்த ஆடிட்டர், “ராமகிருஷ்ண தபோவனத்திடம் வரி வசூல் செய்யப்படவில்லை” என்று வெட்டவெளிச்சமாக அறிக்கை கொடுத்துள்ளார். அன்றைய தேதியில் இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஏன் கைகட்டி வேடிக்கை பார்த்தார்? ராமகிருஷ்ண தபோவனத்திடம் வரிவசூல் செய்வதற்கான எள்ளளவாவது முயற்சி எடுக்கப்பட்டதா? அவர் ஏதேனும் எழுத்துப் பூர்வமாக ராமகிருஷ்ண தபோவனத்திடம் வரி வசூல் செய்வதற்கு கடிதம் அனுப்பி உள்ளாரா?

இதற்கு ஊராட்சி நிர்வாகம் மற்றும் அன்றைய ஊராட்சி தலைவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்!
அள்ளி அள்ளித் தரும் தபோவனம்… கேட்கத் துப்பில்லாத பஞ்சாயத்து!
ராமகிருஷ்ண தபோவனம் என்பது மக்களின் வளர்ச்சியிலும், நாட்டின் வளர்ச்சியிலும், ஊரின் வளர்ச்சியிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள். கேட்டால் அள்ளி அள்ளித் கொடுப்பதுதான் ராமகிருஷ்ண தபோவனத்தின் பண்பாடாகும். அவர்களிடம் வரி கேட்டால் நிச்சயம் கொடுப்பார்கள். ஆனால், கேட்பதற்குத்தான் ஊராட்சி நிர்வாகத்திற்குத் துப்பில்லை!
இனிமேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாகப் பின்வரும் ராமகிருஷ்ண தபோவனத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் எழுத்துப்பூர்வமான கடிதம் மற்றும் நோட்டீஸ் அனுப்பி, உரிய வரியை உடனடியாக வசூலிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் & விடுதிகள்:
1.சிபிஎஸ்இ பள்ளி ,
2.நரேந்திர வித்யாலயா பள்ளி,
3.விவேகானந்தா ஆரம்பப் பள்ளி,
4.விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி,
5.விவேகானந்தா வித்யாலயா பள்ளி
6.மற்றும் விவேகானந்த வித்யாலயா ஹாஸ்டல்.
தொழில் & வணிகப் பிரிவுகள்:
7.தபோவனத்தின் தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரிண்டிங் பிரஸ்.
விவசாயம் & பண்ணைகள்:
8.மாட்டுப் பண்ணை மற்றும் விவசாயத் தொழில்கள்.
குடியிருப்புப் பகுதிகள்:
9.படுகையில் மக்கள் குடியிருக்கும் இடங்கள்
- மற்றும் சாரதா நகர் குடியிருப்புகள்.
இறுதி எச்சரிக்கை!
நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க நினைக்கும் தபோவனத்திடம் முறைப்படி வீட்டு வரி, தண்ணீர் வரி, சொத்து வரிகளைக் கேளுங்கள்; எழுத்துப்பூர்வமாகக் கடிதம் மற்றும் நோட்டீஸ் அனுப்புங்கள், அவர்கள் நிச்சயம் கொடுப்பார்கள். அதைவிடுத்து, மக்கள் வரிப்பணத்தைப் பாழாக்கி, கடமையைச் செய்யத் தவறும் ஊராட்சி நிர்வாகமே… தூங்கியது போதும், வரியை வசூலித்து நாட்டின் வளர்ச்சிக்கு வழிவிடு!






