
மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கப் பிரிவான மின்வாரிய மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF) சார்பில், தமிழ்நாடு மின்வாரியத்தில் கேங்மேன் பணியாளர்கள் 5,493 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கிடவும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரம் செய்திடவும் வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி,

திருச்சியில் இன்று (25.06.2026) மாலை 4 மணிக்கு மத்தியப் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் சிறப்புரையாற்றிய துரை வைகோ எம்.பி பின்வருமாறு பேசினார்.
மின்வாரியத்தில் விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்க வேண்டும் மற்றும் நீண்டகால ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை விரிவாக எடுத்துரைத்தேன்.

2019 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 15,106 பேரில், அதிமுக ஆட்சியில் 9,613 பேருக்கு 02.03.2021 அன்று பணிநியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில், 5,493 தொழிலாளர்கள் இதுவரை விடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க வேண்டும் என எங்கள் தொழிற்சங்கம் பல்வேறு நிலைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தலைவர் வைகோ அவர்கள் 30.08.2021 அன்று முந்தைய அரசுக்கு கடிதம் எழுதினார்.

எனது அறிவுருத்தலின் படி, 31.08.2021 அன்று பட்ஜெட் மனுவில் அன்றைய எங்கள் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு. ரகுராமன் அவர்கள் இந்தக் கோரிக்கையை எழுப்பினார்.

அதேபோல, எனது ஆலோசனையின் படி 07.09.2021 அன்று அன்றைய எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. புதூர் மு. பூமிநாதன் அவர்கள் சட்டமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பினார். இதன் தொடர்ச்சியாக தனியார் கமிட்டி அமைக்கப்பட்டது.

நான், கடந்த 12.04.2022 மற்றும் 28.12.2022 ஆகிய தேதிகளில் அன்றைய மின்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி அவர்களை இருமுறை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
12.04.2023 அன்று சட்டமன்றத்தில் மதிமுக உறுப்பினர் திரு. புதூர் பூமிநாதன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு “விரைவில் நல்ல தீர்வு” என்று அப்போதைய அமைச்சர் உறுதியளித்தார்.

06.07.2023 அன்று முன்னாள் மின்துறை பொறுப்பு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அதன் பிறகு, அன்றைய மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்புவகித்த திரு. சிவசங்கரன் அவர்களையும் நேரில் சந்தித்து இக்கோரிக்கை குறித்து வலியுறுத்தியதுடன், தேர்தலுக்கு முன்பாகவே பணி ஆணை வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டேன்.
எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு முறையாக நடத்தப்பட்ட பின்னரும் 5,493 பேர் விடுபட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்கள் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளன. பெரும்பாலானோர் முதல் தலைமுறை அரசுப் பணியாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் கூட தடைபட்டுள்ளன.
இதனை கருத்தில் கொண்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அன்புச் சகோதரர் திரு. ஜோசப் விஜய் அவர்களையும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அப்போதே இருவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் திரு. நிர்மல் குமார் அவர்களை சந்தித்த போது, அவர் இந்தக் கோரிக்கை அரசு ஏற்கிறது என்றும், உறுதியாக “இவர்களுக்கு பணி வழங்கப்படும்” என்றும் உறுதியளித்தார்.
இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், “15 ஆயிரம் காலி இடங்களை நிரப்புவதோடு, விடுபட்ட 5,493 கேங்மேன் பணியாளர்களையும் சேர்த்து 20,493 நியமன ஆணைகளை விரைவில் வெளியிட முதல்வரின் ஒப்புதலைப் பெற்றுவிட்டோம். நிதித் துறையின் ஒப்புதலைப் பெற்றவுடன் அவர்களுக்கு பணியாணை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டவுடன் இன்று காலை மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சருக்கு அலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டேன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் உரையில் கூறியதுடன்,
கவன ஈர்ப்பு பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டமாக மாறியுள்ளதை எடுத்துக்கூறி மகிழ்வோடு கூட்டத்தை நிறைவு செய்தார்.





