
திருப்பராய்த்துறை அறநிலையத்துறைக்கு சொந்தமான , வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான நூற்றுக்கால் மண்டபத்தை, எவ்வித அரசு அனுமதியும் இன்றி ‘நரேந்திரா வித்யாலயா’ என்ற நர்சரி பள்ளி ஆக்கிரமித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பள்ளி திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவன கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது.
நெற்குவியலில் கல்வி; ஆபத்தில் பிஞ்சுகள்!
பாதுகாப்பற்ற ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த நூற்றுக்கால் மண்டபத்தில், நெல் மூட்டைகளுக்கு இடையே பிஞ்சுக் குழந்தைகள் அமர வைக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படுகிறது. கல்வி பயில வேண்டிய இடத்தில், நெற்குவியல்கள் கொட்டிக் கிடப்பதும், அந்த ஆபத்தான சூழலில் பள்ளி ஆசிரியர்களே புகைப்படம் எடுப்பதும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிலத்தை அபகரிக்கும் நோக்கில், திட்டமிட்டு இந்த ஆக்கிரமிப்பை பள்ளி நிர்வாகம் அரங்கேற்றி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாரிக்கு மிரட்டல்: அமைச்சரின் உத்தரவை மீறும் துணிச்சல்!
கடந்த ஜூலை 6ம் தேதி, அறநிலையத்துறை அமைச்சர் நேரடி ஆய்வு மேற்கொண்டு, பழமை வாய்ந்த மண்டபத்தைப் பாதுகாக்க உடனடியாகத் திருப்பணிகளை மேற்கொள்ளவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் உத்தரவிட்டிருந்தார். அரசின் இந்த உத்தரவைச் செயல்படுத்த முனைந்த திருக்கோயில் செயல் அலுவலர் பிரபாகருக்கு, பள்ளி நிர்வாகமும், சமூக விரோதிகளும் சேர்ந்து நிர்வாக நெருக்கடி கொடுத்து மிரட்டி வருவது உச்சகட்ட அத்துமீறலாகும்.
நர்சரி நரேந்திரா வித்யாலயா எல்கேஜி யுகேஜி பள்ளிக்கு அனுமதி கிடையாது,
முடங்காத நிர்வாகம்; தொடரும் ஆக்கிரமிப்பு!
திருப்பராய்த்துறை, ராமகிருஷ்ண தபோவனம் கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள், முறையற்ற வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் வருவாய்த்துறை மூலம் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டாலும், சட்டத்திற்குப் புறம்பான இந்த நர்சரி பள்ளியின் செயல்பாடு மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருவது வியப்பை அளிக்கிறது.திருக்கோயிலுக்கு பலகோடி ரூபாய் வாடகை பாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் ராஜ்மோகன்?
குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பழமை வாய்ந்த மண்டபத்தைப் பராமரிக்கவும், அறநிலையத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்கள் தலையிட்டு, அனுமதி இன்றி நடக்கும் இந்த நர்சரி பள்ளியை உடனடியாக மூட வேண்டும். மேலும், பணியில் உள்ள செயல் அலுவலரை மிரட்டும், நிர்வாக நெருக்கடி கொடுக்கும் சட்டவிரோத கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சிவனடியாரும், சமூக ஆர்வலர்களும் ஒருமித்த குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.




