
.திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில் அரசு விழியிழந்தோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பார்வை குறைவுடைய மாற்றுத்திறன் மாணவிகள் பயின்று வருகின்றனர். வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயில பள்ளி வளாகத்திலேயே விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி(18) என்கிற மாணவியும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவி தற்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகிறார். இந்த நிலையில் நேற்று அந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த விடுதி கண்காணிப்பாளர் இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு பள்ளி தரப்பிலும் அந்த மாணவியின் பெற்றோர் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விரக்தியடைந்த அந்த மாணவி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை அரசு மருத்துவமனை முன்பு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் காவல்துறையினர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
நியூ திருச்சி டைம்ஸ் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/HECU1DujoI2A4Xa07hehlv