திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவள்ளுவரின் “செயற்கரிய செய்வார் பெரியர்” என்ற குறளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த முகாமில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலில், சப்-கலெக்டர் மற்றும் மாவட்ட திட்ட இயக்குநர் (வளர்ச்சி) சுவாதி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பட்டா முதல் மொபைல் வரை…
முகாமில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின் விவரம் வருமாறு:
மனைப் பட்டா மாறுதல் – 24 பேருக்கு
பசுந்தாள் உரம் – 7 பேருக்கு
புதிய குடும்ப அட்டை – 18 பேருக்கு
இறப்பு நிவாரணம் – 2 குடும்பங்களுக்கு
கல்வி உதவித்தொகை – 1 மாணவருக்கு
ஆண்ட்ராய்டு மொபைல் – 10 பேருக்கு
மகளிர் சுயஉதவிக் குழு கடன் – 2 குழுக்களுக்கு
ஆடிப்பட்ட காய்கறி விதைத் தொகுப்பு – 2 பேருக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள்
திருமண உதவித்தொகை – 12 பேருக்கு
இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் உரிய பயனாளிகளிடம் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

முன் முகாமில் பெறப்பட்ட மனுக்கள்… ஒரு வாரத்தில் தீர்வு!
முகாமுக்கு முன்னதாக, 28-07-2026 அன்று திருப்பராய்த்துறை சிவன் கோவில் நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு முன்-முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
அந்த மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள்ளேயே நடவடிக்கை எடுக்கப்பட்டு, தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மனு கொடுத்தவர்களின் வீடுகளுக்கே நேரடியாக பதில் கடிதம் அனுப்பும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமோசா மடிக்க அல்ல… மக்களின் வாழ்வை உயர்த்த!
“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.” — குறள்: 666
“முந்தைய ஆட்சியில் மக்கள் கொடுத்த மனுக்கள் காற்றில் பறந்தன… சமோசா மடிக்கப் பயன்பட்டன! ஆனால், இப்போது நிலைமையே வேறு!” என மக்கள் சிலிர்க்கிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “கடந்த காலத்தில் மனுக்கள் கொடுத்தால் அவை காற்றில் பறந்தன; சமோசா மடிக்கப் பயன்பட்டன. ஆனால் இப்போது மனுக்கள் கொடுத்த ஒரு வாரத்திலேயே தீராத பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துள்ளது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் சுறுசுறுப்பான செயல்பாடு
முகாம் இவ்வளவு சிறப்பாக பிரம்மாண்டமாக வெற்றிபெற பின்னணியில் நின்று சுழன்று உழைத்தவர்கள் RI ராமாலட்சுமி – VAO ராஜேஷ்குமார் ஜோடிதான்! சுறுசுறுப்பாக பணியாற்றியதாக பொதுமக்கள் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

“லஞ்சம் வாங்காத கரங்கள்,கறைபடியாக் கரங்கள்! ஓய்வறியா உழைப்பாளிகள்” என ஊர்மக்களால் புகழப்படும் இந்த நேர்மையான அதிகாரிகள், முகாமிற்குப் பல வாரங்களுக்கு முன்பே களத்தில் இறங்கி பணியாற்றியதாகவும் கூறப்பட்டது.
மேலும், ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, வட்டாட்சியர் செல்வகணேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட துணை வட்டாட்சியர் சொக்கநாதன், துணை வட்டாட்சியர் கோமதி, அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, பஞ்சாயத்து செயலர் சேகர் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு பணியாற்றினர்.
அண்டை கிராம மக்களின் கோரிக்கை
திருப்பராய்த்துறையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமின் நடவடிக்கைகளைப் பார்த்த அண்டை கிராம மக்கள், “திருச்சி மாவட்டத்தில் திருப்பராய்த்துறை மட்டும்தான் இருக்கிறதா? எங்கள் ஊர்களிலும் இதுபோன்ற முகாம் எப்போது நடக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், வருடத்திற்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் இதுபோன்ற மக்கள் தொடர்பு முகாம்களை விரிவுபடுத்த வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என தெரிவித்துள்ளனர்.
இந்த அதிரடி நடவடிக்கைக்காக தமிழக முதலமைச்சர் விஜய் , மாவட்டப் பொறுப்பு அமைச்சர் ரமேஷ் , மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், ஐ.ஏ.எஸ். ஆகியோருக்கு பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.





