
14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலம் மீட்க கோரிக்கை
அந்தநல்லூர் கிராம் சர்வே எண் 186 / 2A1,3
திருவரங்கம் வட்டம் எலமனூரில் வசிக்கும் மக்கள் சார்பாக, இன்று மாவட்ட ஆட்சியரிடம் காவிரி ஆற்றிற்கு குளிக்கப் போவதற்கு பாதை கேட்டு மற்றும் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்க கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

மக்களின் கோரிக்கை என்னவென்றால்,
” திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் எலமனூரில் வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு எதிரே காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் எங்களால் காவிரி ஆற்றிற்கு போய் குளிக்க முடியாது.
ஏனென்றால் ஆற்றிற்கு போகும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. அங்கு கரையின் மேல் கட்டப்பட்டுள்ள பழமையான சிமெண்ட் படிகள் இன்றும் உள்ளன. ஆனால் ஆற்றிற்கு போகும் பாதை முழுவதும் அடைக்கப்பட்டு விட்டது. தயவு செய்து அந்த மூடப்பட்ட பாதையை திறந்து விட்டு எலமனூரில் வசிக்கும் மக்களுக்கும் காவிரியில் குளிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அந்த இடத்தில் உள்ள 61 ஏக்கர், தனியார் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ளது, அதில் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலமாக உள்ளது.
அந்தநல்லூர் வருவாய் கிராமம், சர்வே எண் 186 / 2A1,3 உள்ள கிட்டத்தட்ட 14-ஏக்கர் நிலம் . தமிழக அரசாங்க வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வருவாய்த்துறை, பதிவுத்துறை ஆவணங்களின் படி அரசாங்க தரிசு நிலமாக இருக்கிறது. தங்களது உடனடி பார்வைக்கு அந்த ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

எங்களது தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் 14 ஏக்கர் அரசாங்க தரிசு நிலத்தை மீட்டு,
- எலமனூர் மக்களுக்கு காவிரி ஆற்றிற்கு போவதற்கான பாதையை திறந்து விட வேண்டும்.
- வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க வேண்டும்.
- அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்
- திருப்பராய்த்துறை கிராமத்திற்கான ஊராட்சி அலுவலகம் அமைக்க வேண்டும்.
- கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் அமைக்க வேண்டும்.
- சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும்.
- விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
- உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். ” என்பதாகும்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வருவாய் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கேள்வி. மேலும் 50க்கும் மேற்பட்ட மக்கள் இலவச வீட்டுமனை மனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருப்பதாக தெரிய வருகிறது.







