
திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது


திருச்சியில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புடைய கள்ள நோட்டுகள் பறிமுதல்; வட மாநிலத்தவர்கள் இருவர் கைது
திருச்சி திருவெறும்பூர் அருகே காரில் கடத்திவரப்பட்ட 8 லட்சத்து 37 ஆயிரத்து 800 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டது. இதுகுறித்து வடமாநிலத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு;
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு வெளிமாநில பதிவெண் கொண்ட காரில் பெட்ரோல் போடப்பட்டு அதற்கு செலுத்திய தொகையில் கள்ள நோட்டு இருப்பதை அறிந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துவாக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து துவாக்குடி போலீசார் வெளி மாநில பதிவெண் கொண்ட காரை பின் தொடர்ந்து வந்தனர். மேலும், காட்டூர் அருகே உள்ள மஞ்சத்திடல் செக் போஸ்ட்டில் குறிப்பிட்ட அந்த வாகனத்தை மறித்து சோதனையிட அங்குள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே மஞ்சத்திடல் செக் போஸ்டில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அதிவேகத்தில் வந்த வட மாநில பதிவென் கொண்ட கிவிட் காரை மறித்தபோது வாகனத்தை அதிக வேகமாக இயக்க முயற்சித்தனர்.
இதனால் துரத்திச் சென்று வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீசார், வாகனத்தை சோதனையிட்டபோது இரண்டு பைகளில் 200 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து 200 ரூபாய் கள்ள நோட்டு 41 கட்டுகள், 89 நோட்டுகள் உட்பட ரூ.8,37,800 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபாரோ பாஹிர் (54), நாராயணராம் (34) ஆகிய இருவரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளநோட்டுகளை மாற்றி விட்டு திருச்சி வழியாக செல்லும்போது போலீசாரிடம் பிடிபட்டது தெரியவந்துள்ளது.
மேலும், இதில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் எவ்வளவு பணம் கள்ள நோட்டுகள் உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






