
துரை வைகோ MP நேற்று (21.01.2026) மாலை, IndiGo Airlines நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமை அதிகாரி ஸ்ரீனிவாசன் அவர்களை நேரில் சந்தித்து, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கூடுதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள், பண்டிகைகள், குடும்ப நிகழ்வுகள் மற்றும் அவசரத் தேவைகள் போன்ற நேரங்களில் தாயகம் திரும்ப வேண்டிய அவசியம் ஏற்படும் போது, போதுமான விமான இணைப்புகள் இல்லாமையும், அதிக விமான கட்டணங்கள் காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சிரமங்களை எடுத்துரைத்தார்.

அதேபோல், மத்திய தமிழ்நாட்டின் விவசாய மற்றும் தொழில் பகுதிகளை உள்ளடக்கிய திருச்சி பிராந்தியத்தில் மிகப்பெரிய விமான சரக்கு (cargo) கையாளும் திறன் இருப்பதையும், அந்தச் சாத்தியத்தை முழுமையாகப் பயன்படுத்த கூடுதல் விமான இணைப்புகள் அவசியம் என்பதையும் வலியுறுத்தினார் துரை வைகோ.
இந்தப் பின்னணியில், IndiGo Airlines நிறுவனத்திடம் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன:

• தற்போது வாரத்திற்கு 3 ஆக குறைக்கப்பட்டுள்ள திருச்சி–மும்பை விமான சேவையை மீண்டும் தினசரி சேவையாக மாற்றுதல்
• தற்போது ஒரு தினசரி விமானமாக உள்ள திருச்சி–ஹைதராபாத் சேவையை இரண்டு தினசரி விமானங்களாக உயர்த்துதல்
• திருச்சி–கோவா மற்றும் திருச்சி–கொச்சின் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்குதல்
• தற்போது ATR இல் இயக்கப்படும் திருச்சி – யாழ்ப்பாணம் சேவையை A 320 ரக விமானங்கள் மூலம் இயக்க வேண்டும்.
•திருச்சி–கொழும்பு நேரடி விமான சேவை.
• திருச்சி–ஜெத்தா, தம்மாம், ரியாத் போன்ற வளைகுடா நகரங்களுக்கு நேரடி விமான இணைப்புகள்
• தற்போது வாரத்திற்கு 11 சேவைகளாக உள்ள திருச்சி–சிங்கப்பூர் விமானங்களை வாரத்திற்கு 14 சேவைகளாக உயர்த்துதல்
• International to International (I–I) transfer வசதியை முழுமையாக பயன்படுத்தி சிங்கப்பூர்–யாழ்ப்பாணம் உள்ளிட்ட இணைப்புகளை ஏற்படுத்துதல்
IndiGo தரப்பில், திருச்சி–மும்பை விமான சேவை மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட slot congestion காரணமாக 3 சேவைகளாக தற்காலிகமாக குறைக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் தினசரி சேவையாக மாற்ற உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல், திருச்சி–ஹைதராபாத் இரண்டாவது தினசரி விமான சேவை தொடங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
திருச்சி–சிங்கப்பூர் விமான சேவை IndiGo நிறுவனத்தின் சிறப்பாக செயல்படும் சர்வதேச வழித்தடங்களில் ஒன்றாக இருப்பதாகவும், அதனை அடிப்படையாக கொண்டு தற்போது வாரத்திற்கு 11 சேவைகளாக உள்ளதை 14 சேவைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.
திருச்சி–கொச்சின் விமான சேவை தொடங்குவது தொடர்பாகவும் சாதகமான முறையில் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சில வளைகுடா நாடுகளுக்கு இருநாட்டு விமான ஒப்பந்தங்களில் (bilateral agreements) இருக்கைகள் நிரம்பியுள்ளதால் உடனடி சேவைகள் சாத்தியமில்லை என்றும், திருச்சி–கொழும்பு விமான சேவை தொடர்பாக தேவையான எண்ணிக்கை மற்றும் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் IndiGo தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மத்திய தமிழ்நாட்டின் மையமாக உள்ள திருச்சியை Point of Call ஆக வளர்த்தெடுத்தால், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என தமிழ்நாட்டின் பெரும்பகுதி மக்கள் பயனடைவார்கள்.
திருச்சி விமான நிலைய வளர்ச்சிக்கு நிர்வாக அல்லது கட்டமைப்பு ரீதியாக ஏதேனும் தடைகள் இருப்பின், அவற்றை நேரடியாக தனது கவனத்திற்கு கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார் துரை வைகோ
திருச்சி மற்றும் மத்திய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்கள் நலன் மற்றும் சமூகத் தொடர்புகளை வலுப்படுத்த, இந்த முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்தார் துரை வைகோMP .
#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko






