திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஜி.கார்னர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில், போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கவும், உரிய பாதுகாப்புக் கட்டமைப்புகளை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து, 16 ஆண்டு காலமாக திருச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.
துரை வைகோ திருச்சி தொகுதியில் வேட்பாளராக இருந்த நேரத்தில், ஜி.கார்னர் பிரச்சனை மிக தேவையான ஒன்று என்பதை பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் சுட்டிக் காட்டினார்கள். தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என உறுதியளித்திருந்தார் துரை வைகோ.
அதன்படி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற நாள் முதல், ஜி.கார்னர் பிரச்சனையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
ஆகவே, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் இணைந்து, ஜி.கார்னர் பகுதியில் இருமுறை கள ஆய்வு செய்திருக்கிறார் துரை வைகோ MP .
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இரயில்வே துறை அதிகாரிகளை வரவழைத்து, தொடர் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை பலமுறை நடத்தி இருக்கின்றார் துரை வைகோ MP.
அதில், இந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு உயர்மட்ட சுழல் பாலம் (ELEVATED ROTARY) அமைந்தால் தான், இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என கண்டறியப்பட்டது.
இந்தப் பகுதியில் உயர்மட்ட சுழல் பாலம் அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறுப்பு என்றாலும், அதற்கான இடத்தை ரயில்வே துறை வழங்க வேண்டும்.
எனவே, துரை வைகோ MP புதுதில்லியில் உள்ள மாண்புமிகு ஒன்றிய ரயில்வே அமைச்சர், மாண்புமிகு ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் என, இருவரையும் இக்கோரிக்கையை செயல்படுத்த வலியுறுத்தி பலமுறை சந்தித்திருக்கிறார்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பங்குபெறும்போது, இந்தப் பிரச்சனை தொடர்பாக துறை அமைச்சர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே உயர் அதிகாரிகளைச் சந்திக்க இருப்பதால், அதற்கு முன்பாக இந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக, இன்று (29.01.2026) திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் துரை வைகோ தலைமையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் ரயில்வே உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை தொடர்ந்து நடந்தது.
ஜி.கார்னர் பகுதியில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சனையைத் தீர்ப்பதிலும், விபத்துகளால் நடக்கும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், அப்பகுதியில் உயர்மட்ட சுழல் பாலம் (ELEVATED ROTARY) அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்திட, தனது முயற்சி தொடர்ந்து இருக்கும் என்பதை திருச்சி மாநகர மக்களுக்கு தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ MP.





