
திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் பாராட்டுக்கள். 16வருடமாக அரசியல்வாதிகள் செய்ய நினைக்காததை, மக்கள் நலன் கருதி செய்துள்ளார்.
திருப்பராய்த்துறை கிராமத்தில் 16 வருடமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வரும் 35 குடும்பங்கள் , அடிப்படை வசதிகள், அரசு பட்டா, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி செய்து தரக் கோரி, சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக முதல்வரின் முகவரி துறை மூலம் ஆன்லைனில் மனு அளித்திருந்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கம்-வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடனடியாக தெருக்குடிநீர் குழாய் அமைத்து தருவதற்கு ஆர்டிஓ சீனிவாசன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இரவு பகலாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
16வருடமாக எந்த ஒரு அரசியல்வாதியும் செய்ய நினைக்காததை, மக்கள் நலன் கருதி செய்து காண்பித்த திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு திருப்பராய்த்துறை வாழ்மக்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியராக சரவணன் பொறுப்பேற்றதில் இருந்து பொதுமக்களின் நலன் கருதி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பொறுப்பேற்ற பொழுது அறிவித்திருந்தார். அது நடைமுறையில் உள்ளது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.
பெருகமணியில் வாழ்ந்து வரும் ஒரு அபலைப் பெண்ணின் வீட்டிற்கு செல்வதற்கான பாதையை, பக்கத்து வீட்டுக்காரர் வேலி கட்டி திடீரென மூடிவிட்டார் என்று சரவணனிடம் அவரது அலுவலகத்தில் இரவு முறையிட்டார்.நள்ளிரவு 12:00 மணிக்கு ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் காவல்துறையுடன் உதவியுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு செல்வதற்கான பாதையை வேலியை அகற்றி திறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பராய்த்துறை மக்கள் கூறியதாவது, “தற்காலிகமாவது மின்சார வசதியும் செய்து கொடுத்துவிட்டால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனின் அடுத்த அதிரடி நடவடிக்கை என்னவென்று?








