
தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்று வாழ்ந்து வருகிறார்கள். இதுவரை அவர்கள் பத்து தேர்தல் சந்தித்து விட்டார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் செய்து தருவோம் என்று அரசியல்வாதிகள் உறுதியளிப்பார்கள், பின்னர் மறந்துவிடுவார்கள். ஆகவே இந்த முறை தேர்தலை புறக்கணிக்கப் போவதாக இந்த மக்கள் முதலமைச்சருக்கும் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் கடிதம் எழுப்பி உள்ளனர்.
அவர்கள் கோரிக்கையில் தெரிவித்துள்ள விவரங்கள் பின்வருமாறு.
” பார்வை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14-32,51A,226
கடந்த 16வருடங்களாக இந்திய குடிமகனுக்கு இந்திய அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை. இல்லையென்றால் தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள் திருப்பராய்த்துறையைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்! நான் மேற்கண்ட முகவரியில் கடந்த 16ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம். என்னைப் போன்று பலர் திருச்சி கரூர் மெயின் ரோட்டில் சிவன் கோயிலுக்கு எதிரே வாழ்ந்து வந்தனர். 16வருடங்களுக்கு முன்னால் NH-ரோடு அகலப்படுத்தும் போது வீடு இடிக்கப்பட்டு, அன்றைய அரசாங்க நிர்வாகத்தால் நந்தவனம், திருப்பராய்த்துறை என்ற இந்த இடத்தில் நாங்கள் குடியமர்த்தப்பட்டோம். நாங்கள் மிகவும் மோசமான நிலையில் 16வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருகிறோம்.
தயவுசெய்து, ஒரு முறை வந்து பாருங்கள் எங்களை மனிதர்கள் போல் வாழ்வதற்கு வழிவகை செய்து தாருங்கள்.
நாங்கள் அறநிலையத்துறைக்கு செலுத்த வேண்டிய அடிமனை வாடகை செலுத்த தயாராக இருக்கிறோம். ஆகவே எங்களிடம் உரிய தொகையை பெற்றுக்கொண்டு அடிமனை வாடகை ரசீதும் மற்றும் மின்சாரம், குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதி, தெரு விளக்கு ரோடு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு தடையின்மை சான்றிதழ் வழங்குமாறு தங்களிடம் கரம் கூப்பி சிரம் தாழ்த்தி காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையென்றால் தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள், நந்தவனத்தில் வசித்து வரும் 35குடும்பத்தைச் சார்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்களும் திருப்பராய்த்துறையில் வசிக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக முடிவெடுத்துள்ளனர்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள்
1.கோயில் நிர்வாகம் 2022இல் பணம் கட்டுவதற்காக அனுப்பிய நோட்டீஸ், பணம் கட்டம் சென்றோம் எங்களிடம் பணம் வாங்கவில்லை.
2.2025இல் பணம் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம் என்று எங்களால் அனுப்பப்பட்ட பிரமாண பத்திரம்.
3.இருப்பிட சான்றிதழ் / நந்தவனத்தில் வசிப்பதற்கான சான்றிதழ். “
உடனடியாக நந்தவனத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு மின்சார இணைப்பாவது தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்பது அங்கு வாழ்ந்து வரும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றி பேசும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14,21,15to32,51A &226 பிரிவுகளின் படி மின்சாரம் என்பது அடிப்படை உரிமை அதை கொடுக்க வேண்டும் என்று பல நீதிமன்றங்களும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியமும் பலமுறை தீர்ப்பு வழங்கியுள்ளது.
Delhi High court order 15th December, 2025 ,W.P.(C) 18953/2025,
Order of The Tamil Nadu Electricity Ombudsman, CHENNAI.Appeal Petition No 69 of 2016,
Madras High court order W.P.Nos. 17608 of 2013
& W.P.Nos.7135 of 2014.
அதற்கு ஏற்றார் போல் மின்சார வாரிய சட்டத்திலும் இடம் இருக்கிறது, ஆனால் மின்சார வாரியம் ஏனோ இதை நிறைவேற்றாமல் என்ஓசி கேட்டு மக்களின் விண்ணப்பங்களை நீராகரிப்பதில் குறியாக உள்ளது.
மக்களின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், தலையிட்டு 16 வருட இந்த மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார் என காத்திருக்கிறார்கள்.





