திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும்.

சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில், திருச்சி-கரூர் ரோட்டில் முக்கியமான இடங்களில் ஒரு சென்டின் குறைந்தபட்ச விலை கிட்டத்தட்ட 5லட்சம் ரூபாய். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 6,000 சென்டின் இன்றைய மார்க்கெட் விலை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்.
இன்றைய தேதியில் அந்த இடம் ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது. யாரோ சில புண்ணியவான்கள் அரசாங்க ரெக்கார்டையே மாற்றி விட்டார்கள். இது எங்கனம் சாத்தியமாயிற்று?

அங்கு காடுகள் இல்லை. பள்ளி, விளையாட்டு மைதானம், விளைநிலங்கள் உள்ளன. ஆனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 1927 ஆம் ஆண்டின் அ பதிவேடு எடுத்துப் பார்த்தால் அது பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வண்டி பாதை, வாய்க்கால்கள், கிணறு, லயன் கரை போன்றவைகளும் உள்ளன.
பாதுகாக்கப்பட வேண்டிய 60ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க,அந்த இடத்தை மீட்டு காடுகள் அமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

செவிசாய்க்குமா? அரசாங்க இயந்திரம் அல்லது அதிகாரத்தின் முன்னே, பணத்தின் முன்னே மண்டியிட்டு விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






