
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் நகர காவல் நிலைய ஆய்வாளராக கடந்த 12 மாதங்களாக பணியில் இருந்தவர் திருவானந்தம் அவர்கள். இவர் ஏற்கனவே பொன்மலை மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் ஆய்வாளராக பணிபுரிந்து அந்தப் பகுதி மக்களின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக திகழ்ந்தவர். கடமையில் சிறிதும் கண் துஞ்சாமல் எவருக்கும் தலைவணங்காமல் தன்னுடைய நேர்மையையே ஆயுதமாகக் கொண்டு திறம்பட காவல்துறையில் பணியாற்றும் காவலர்களில் மிகச்சிறந்த காவலராக திகழ்ந்தவர் தான் இந்த திருவானந்தம்.
ஆன்மீக நகரம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் ஆன்மீகத்திற்கு நிகராக அராஜகங்களும் அவ்வப்போது அரங்கேரிய வண்ணமே இருக்கும். இது ஸ்ரீரங்கம் நகரில் வாழும் அனைவரும் அறிந்த ஒரு கசப்பான உண்மையே. வழிப்பறி கஞ்சா அடிதடி கொலை என சர்வ சாதாரணமாக ஸ்ரீரங்கம் நகரில் குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. இவர் வருகைக்கு பிறகு அவை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் நிகழ்வுகளும் நடந்தேற தொடங்கியது.
ஆம் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளராக திருவானந்தம் அவர்கள் பதவி ஏற்ற பிறகு ஸ்ரீரங்கம் நகரில் நடைபெற்று வந்த குற்றச்சம்பவங்கள் மெல்ல மெல்ல குறைய தொடங்கின. அதற்கு காரணம் இவரின் கம்பீரமான அணுகுமுறைகளும் அதிரடியான ஆக்சன் நடவடிக்கைகளுமே ஆகும். பொது மக்களுக்கு எளியவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும் இருக்கும் இவர் குற்றவாளிகளுக்கு சிங்கமாக தெரிந்தார் என்பதை உண்மை. அதனால் தான் ஸ்ரீரங்கம் மக்கள் இவரை சிங்கம் என்று அழைத்தார்கள். எவ்வளவு உயர் பதவியில் இருந்தவர் இருப்பவர்களாக இருந்தாலும் சரி அரசியல் ஆளுமை பெற்றவர்களாக இருந்தாலும் சரி அதிகார பலம் மிக்க நபராக இருந்தாலும் சரி இவர் பார்வையில் அனைவரும் ஒன்றே. காவல் நிலையத்தில் இவரை சந்திக்க சென்றால் அமர வைத்து சந்திக்க வருபவர்களுக்கு தேநீர் தந்து அவர்களிடம் மிகவும் அக்கறையோடு பேசும் எளிய பண்பும் அந்த சிரித்த முகமும் மக்கள் மத்தியில் மிகவும் கவர்ந்தது. இவருடைய பணியின் பொழுது தான் போதைப் பொருட்கள் விற்ற நபர்களும் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களும் அடிதடி வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் காரணமாக ஸ்ரீரங்கத்தில் குற்ற சம்பவங்கள் பெருமளவில் குறைய தொடங்கியது. மீண்டும் ஸ்ரீரங்கம் ஆன்மீக பூமியாக மாறுகின்ற வேளையிலே தேர்தல் வருவதை காரணம் காட்டி இவரை ஸ்ரீரங்கத்தில் இருந்து பழூருக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவு வந்தது. இந்த தகவல் ஸ்ரீரங்கம் மக்களுக்கு தெரிந்தவுடன் அனைவரும் பரிதவித்துப் போனார்கள்.
ஆய்வாளர் திருவானந்தம் பணி மாறுதலாகி போகக்கூடாது அவர் ஸ்ரீரங்கத்திலேயே பணியை தொடர வேண்டும் என்று ஸ்ரீரங்கம் வாழ் மக்கள் தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தங்கள் விண்ணப்ப கடிதங்களை அனுப்பி கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்று திருவானந்தம் அவர்கள் பணி மாறுதல் ஆகி தனக்கு கொடுக்கப்பட்ட காவல் நிலையம் சென்று விட்டார். சிங்கம் எங்கிருந்தாலும் சிங்கம் தான் என்பதற்கேற்ப பழூரில் இவரின் சிறப்பான சம்பவங்கள் குற்றவாளிகளுக்கு விறுவிறுப்பாக காத்திருக்கின்றது என்பது நிதர்சனம்.
அதே வேளையில் நிச்சயமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் திருவருளால் மீண்டும் இந்த சிங்கம் ஸ்ரீரங்கம் காவல் நிலைய கோட்டையில் கம்பீரமாக அமருவார் என்பது ஒவ்வொரு ஸ்ரீரங்கவாசிகளின் பிரார்த்தனையாகவே உள்ளது. அது நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு நாம் காவல் ஆய்வாளர் திருவானந்தம் அவர்களை அன்போடு வழி அனுப்பி வைக்கின்றோம்.
அருமை சகோதரரே மீண்டும் நீங்கள் ஸ்ரீரங்கம் வந்து ஆளும் நாட்களுக்காக நாங்கள் ஆவலோடு காத்திருக்கின்றோம்.





