
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போதைய திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகலாகவும், அதிக வளைவுகள் கொண்டதாகவும் உள்ளது. மேலும், ஒருபுறம் காவிரி ஆறும் மறுபுறம் ரயில்வே இருப்புப் பாதையும் இருப்பதால், இந்த சாலையை அகலப்படுத்துவது சாத்தியமற்ற நிலை உருவாகியுள்ளது.

இந்த சாலைக்கு மாற்றாக புதிய தடத்தில் திருச்சி – கரூர் சாலை அமைப்பது தொடர்பாக ஏற்கனவே முன்மொழிந்திருந்தும், நீண்டகாலமாக திட்ட மதிப்பீடு நிலையிலேயே இருப்பது குறித்து கடந்த 04.12.2025 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் துரை வைகோ எம்.பி. இதற்கு வழங்கப்பட்ட பதிலில் புதிய வழித்தடம் குறித்து தெளிவான தகவல் இடம்பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, 19.12.2025 அன்று மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களை நேரில் சந்தித்து, இந்த திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள், தற்போதைய சாலையின் ஒப்பந்த காலம் முடிவடைய இருப்பதால், 2026 இறுதிக்குள் புதிய திட்ட மதிப்பீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருந்தார்.

அதேபோல், துவாக்குடி – மாத்தூர் – பஞ்சப்பூர் வரை திருச்சி தெற்கு பகுதியில் அரைவட்ட சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பஞ்சப்பூர் – ஜீயபுரம் வரை சாலை பணிகள் முழுமையடையாமல் உள்ளன. இதனுடன், ஜீயபுரம் – துவாக்குடி பகுதியை இணைத்தால் திருச்சியின் வடக்கு பகுதியில் முழுமையான வட்ட சாலை உருவாகும் என்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையும் இருந்து வந்தது. இது குறித்தும் 11.12.2025 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார் துரை வைகோ எம்.பி. அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள், இந்த திட்டத்தை பிரதமரின் PM Gati Sakthi திட்டத்தின் கீழ் பரிசீலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான திருச்சி – கரூர் புதிய வழித்தடம் மற்றும் திருச்சி வடக்கு வட்ட சாலை திட்டங்களுக்கு புதிய திட்ட மதிப்பீடு செய்ய தற்போது 14.03.2026 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளமை உள்ளபடியே மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த இரு கோரிக்கைகளும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், மாண்புமிகு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் துரை வைகோ எம்.பி.





