
மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று (27.05.2026) நேரில் சந்தித்தேன்.
முதலில் நன்றி தெரிவித்தல்:
திருச்சி – திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, திருப்பதி – குண்டூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து அறிவித்ததற்கும்,
திருச்சி – சார்லப்பள்ளி (Hyderabad) இடையிலான சிறப்பு இரயில் சேவையை நிரந்தர சேவையாக மாற்றியதற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.
இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டி கோரிக்கை:
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும், கீரனூர் – திருவெறும்பூர் இடையே முக்கிய இணைப்புப் பாதையாகவும், சுமார் 45 கிராமங்களுக்கான முக்கிய சந்திப்புப் பகுதியாகவும் விளங்கும் கீரனூர் LC No: 355இல் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மீண்டும் நினைவூட்டி கடிதம் வழங்கினேன்.
இரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டி கோரிக்கை:
பின்வரும் இரயில்களுக்கு நிறுத்தம் வழங்கிடக் கோரினேன்:
- திருச்சி – மயிலாடுதுறை MEMU விரைவு இரயில் (16833/34) மற்றும் எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு இரயில் (16187/88) ஆகியவற்றுக்கு திருவெறும்பூர் (TRB) இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும்,
- மைசூரு – கடலூர் துறைமுக விரைவு இரயில் (16231/16232) பெட்டவாய்த்தலை இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும் உரிய காரணங்களுடன் கோரிக்கை வைத்தேன்.
- போட் மெயில் எக்ஸ்பிரஸ் (16751/16752) இரயிலுக்கு கீரனூர் இரயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.
புதிய இரயில் சேவைகள் வேண்டி கோரிக்கை:
- திருச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் சாமராஜநகர் வரை இரவு நேர விரைவு இரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்,
- திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் வரை தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு இரயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும்,
- தற்போது ஒற்றை மின்சாரப் பாதையாக இயங்கும் திருச்சி – கரூர் இரயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்கி, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தேன்.
விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்கும் கோரிக்கை:
2030-க்குள் 48 முக்கிய நகரங்களில் இரயில் புறப்படும் திறனை இரட்டிப்பாக்கும் விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்க வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை விளக்கி கோரிக்கை வைத்தேன்.
எனது நன்றியை அன்புடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அவர்கள், எனது அனைத்து கோரிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்து, வழங்கிய கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு, அவை அனைத்தையும் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
27.05.2026
புதுடெல்லி





