
திருச்சி மாநகரை மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் உயிர்நாடியாகத் திகழ்ந்த தேசிய நெடுஞ்சாலை 81 NH81, இன்று அவலத்தின் அடையாளமாக மாறியுள்ளது. குடமுருட்டி முதல் பெட்டவாய்த்தலை வரையிலான 12 கிலோமீட்டர் சாலைப் பகுதி, தார்ச்சாலையல்ல; அது தினந்தோறும் ரத்தம் படிந்த மரணச்சாலையாகத் திகழ்கிறது. நான்கு வழிச்சாலையாக இருக்க வேண்டியது, இருவழிச் சாலையாகக் கூட இன்றி, விபத்துகளின் கூடாரமாக மாறிப் போனது வேதனை! குறைந்தபட்சம் நடுவில் தடுப்பு-Center Median அமைத்தாலாவது உயிர்ச்சேதங்கள் குறையுமே என்பது சமூக ஆர்வலர்களின் ஆதங்கக் குரல்.

பணத்தைப் பிடிக்கும் கரம் பாதை காக்காத மரம்!
சுங்கச்சாவடியில் மாதந்தோறும் பல கோடி ரூபாய் சுங்கவரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலைப் பராமரிப்பில் மட்டும் ஏன் இந்த மௌனம்? மக்களின் வரிப்பணத்தை வாரிக் குவிப்பதில் காட்டும் முனைப்பு, சாலை மேம்பாட்டில் ஏன் இல்லை? பராமரிப்பற்ற இந்த நெடுஞ்சாலைத் துறைக்கு எதற்கு இவ்வளவு பெரிய சுமை? என்பது மக்களின் ஆவேசமான கேள்வி.

பத்து கடந்தும் விடியல் இல்லை பாதியிலேயே நிற்கும் சாலை!
அரசின் அலட்சியம் அங்கே அப்பட்டமாகத் தெரிகிறது. கடந்த 2015ஆம் ஆண்டிலேயே நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடும் வழங்கப்பட்டும், 11 ஆண்டுகள் கடந்தும் அங்கு ஒரு கூடை மண் கூடக் கொட்டப்படவில்லை. அரசு வாங்கிய நிலங்கள் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் கூடாரமாக மாறி, விதியின் விளையாட்டுக்கு வித்திட்டுக் கொண்டிருக்கின்றன.

உயிரைப் பறிக்கும் அலட்சியம் அதிகாரிகளின் விபத்து எச்சரிக்கை!
இதை வெறும் ‘விபத்து’ என்று கடந்துவிட முடியாது; இது அதிகாரிகளின் மெத்தனத்தால் நிகழும் ‘அதிகாரப்பூர்வ கொலைகள்’. உயர் அதிகாரிகளுக்கே இப்பாதையில் பாதுகாப்பு இல்லை என்பதற்கு, காவல் துறை ஆய்வாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததே சாட்சி. திருப்பராய்த்துறையின் மண்ணில் படிந்திருக்கும் ரத்த வடுக்கள், இன்றும் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைக்கின்றன.

துரை வைகோவின் அதிரடி தீர்வை நோக்கி ஒரு வழி!
இந்த இருண்ட சூழலில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள், மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. நீண்டகால பசுமைச் சாலைத் திட்டத்திற்காகக் காத்திருக்காமல், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலத்தைப் பயன்படுத்தி விபத்து மிகுந்த பகுதிகளை உடனடியாக அகலப்படுத்த வேண்டும் என்பதே அவர் முன்வைக்கும் கோரிக்கை. சுரங்கப்பாதைகள் மற்றும் மின்விளக்கு வசதிகளைச் செய்து தர வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

துவங்கியது அளவீட்டுப் பணி துடிக்கும் மக்களின் துயரத்தணி!
தற்போது, திண்டுக்கரை முதல் பெட்டவாய்த்தலை வரை நிலங்களை அளந்து மார்க் செய்யும் பணி துவங்கியுள்ளது. இதுவேனும் இறுதி நடவடிக்கையின் தொடக்கமாக அமையுமா? அல்லது இன்னும் எத்தனை உயிர்களை இந்த சாலை பலி வாங்கப் போகிறது? மத்திய அரசும் நெடுஞ்சாலைத் துறையும் விழித்துக்கொண்டு, இனியேனும் இப்பாதையைச் சீர் செய்யுமா என்பதுதான் மக்களின் தற்போதைய தவிப்பான கேள்வி!





