
எனது திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களின் இன்று (11.06.2026) துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டேன்.
முதலில், திருச்சி, திருவரங்கம் வார்டு எண் 1 இல் வார்டில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நமது எம்பி நிதியில் ஏற்கனவே கட்டிகொடுத்த நியாய விலைக்கடை போதாததால், வார்டு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்களின் கோரிக்கையான இன்னொரு புதிய நியாய விலை கடை அமைத்தல் தொடர்பாக அப்பகுதிக்கு காலை 10:30 மணிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன்.

மேலும், பொதுமக்களின் அழைப்பை ஏற்று, திருவரங்கம் கீழவாசல் கோபுரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்யப்பட்டுவரும் பராமரிப்பு பணிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் சங்கடங்களை ஆய்வு செய்தேன். விரைந்து அப்பணிகளை முடித்து பொதுமக்களுக்கு பாதைகளை திறந்துவிடுமாறு கேட்டுக்கொண்டேன். அப்போது அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள மரத்தின் வேர்களை சுட்டிக்காட்டி அதனை சரிசெய்து தர பொதுமக்கள் கேட்டிருந்தனர். அதிகாரிகளை அழைத்து உடனே சரிசெய்ய கேட்டுக்கொண்டேன்.

அதன் பிறகு, திருச்சி, வார்டு எண் 12 மேலசிந்தாமணி பகுதியில் உள்ள பழைய கோட்டை வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாற்று பாதையை பார்வையிட்டு, தேர்தல் முடிந்து தொடங்கப்படாமல் உள்ள புதிய பாலம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.

அடுத்ததாக, திருச்சி திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Ground Water Tank) அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டேன்.
இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நிலைகள் மற்றும் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அந்தந்த பணிகளுக்கான அடுத்தக்கட்ட நகர்வுகளை வடிவமைப்பேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
11.06.2026





