
“புதிய அரசியல் காற்று வீசுது… தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், முதல்வர் விஜய் – இதுதான் மாற்றத்தின் ஆரம்பமா?”
சுடுகாட்டையும் விடாத சுறாக்கள்! திருப்பராய்துறையின் விடியல் நாயகன்அண்ணாதுரை!
84 வருட அவலம்… 84 நாளில் அவிழ்ந்த அதிசயம்!

அநீதிக்கு அடிபணியாதே! அக்கிரமத்தை அறவே ஒழித்திடு!
இதுவே இன்று திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பராய்த்துறை கிராமத்தில் மக்களின் தாரக மந்திரம்.84ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் வினாவிற்கு, வெறும் 84நாட்களில் விடை கண்டுபிடித்துச் சரித்திரம் படைத்திருக்கிறார் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை அவர்கள்!
“ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது” – ஆனால் இப்போது ஊர் விழித்திருக்கிறது

தன்னலமற்ற சேவை… தறிகெட்ட ஊழல்!
இந்த ஊரில் நிலவும் அவலங்கள் அடுக்கடுக்கானவை. கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு சிறிய சொந்த அலுவலகம் கூட இல்லை, பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி, இயற்கை உபாதைகளைக் கழிக்க அக்கம் பக்கத்து வீடுகளை நாடும் அவலம், இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. இங்கே ஆண்டவன் அருளும் இல்லை, அதிகாரிகளின் அறமும் இல்லை. ஊருக்கு ஒரு நீதி, உல்லாசப் பங்களாக்களுக்கு ஒரு நீதி என்பதுதான் இவர்களின் கொள்கையோ?

சுடுகாட்டைச் சுருட்டிய அறக்கட்டளை!
அறநிலையத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் சொந்தமான நிலங்கள் இன்று ஒரு தனியார் அறக்கட்டளையின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இவர்களின் வெறித்தனம் எங்கே போய் நின்றது தெரியுமா? வாழ்க்கை முடிந்து அடக்கம் செய்யும் சுடுகாட்டையும் இவர்கள் ஆக்கிரமித்து வைத்திருப்பதே! இதைக் கேட்டு ஊர் மக்கள் மனு கொடுத்தால், வருவாய்த்துறை அதிகாரிகள் எட்டிப் பார்த்துப் பயப்படுகிறார்கள். “அட்ஜஸ்ட்மென்ட்” என்ற பெயரில் ஊழல் எனும் ஊசி அவர்களின் வாயைத் தைத்து வைத்திருக்கிறது.

518 கோடி ரூபாய் மதிப்புள்ள அறநிலைத்துறை நிலத்தை ஆட்டையப் போட்டுவிட்டு, காவேரி ஆற்றையும் கபளீகரம் செய்திருக்கிறது இந்த “ஊழல் பெருச்சாளிகளின்” கூட்டம்.
அஞ்சா நெஞ்சன் அண்ணாதுரை!
இருண்ட இந்தத் திருப்பராய்துறைக்கு ஒளி பாய்ச்ச வந்திருக்கிறார் அண்ணாதுரை. மக்களின் கண்ணீரைத் துடைக்க, முதல்வரின் முகவரித் துறை மூலம் வந்த மனுவை கையில் எடுத்தார். ஆவணங்களை அலசினார்; உண்மையை உணர்ந்தார்! அந்த இடம் மயானம் என்று உறுதி செய்ததும், வட்டாட்சியருக்கு சுடுகாட்டு நிலத்தை அளந்து காண்பிக்குமாறு கடிதம் அனுப்பி உள்ளார். ஊழல்வாதிகளின் காலடியில் கிடந்த அரசு நிலத்தை, தன் நேர்மை எனும் வாள் கொண்டு மீட்டுத் தரத் துணிந்த அந்த வீரத்தை ஊரே வியந்து பார்க்கிறது.

விடியல் தரும் நம்பிக்கை!
16வருடமாக பஞ்சாயத்து வசதிகள் எட்டாத நந்தவன மக்களுக்கு, விடிய விடிய உழைத்து தெருவிளக்கும் குடிநீரும் வழங்கியவர் இவரே. இப்போது மொபைல் கழிப்பகம், குடிநீர் போர் எனத் திட்டங்கள் அணிவகுக்கின்றன. இது யாரோ ஒரு தனி மனிதனின் செயல் மட்டுமல்ல; மாற்றம் வேண்டும் என்று துடிக்கும் தமிழகத்தின் பிரதிபலிப்பு. இவரைப் போன்ற அதிகாரிகள் ஊருக்கு ஒருவர் கிடைத்துவிட்டால், எந்தக் கொம்பனாலும் பொதுச்சொத்தை அபகரிக்க முடியாது.
இந்த மாற்றத்திற்கு வித்திட்டது தமிழக அரசின் நிர்வாகச் சீர்திருத்தங்களா அல்லது மாற்றத்தை நோக்கிய மக்களின் எதிர்பார்ப்பா?
எது எப்படியோ, காலங்காலமாக அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தலைநிமிர்ந்து நிற்கிறார்கள். ஊழலின் இருள் நீங்கட்டும்; நேர்மையின் ஒளி பெருகட்டும்!





