காவிரி கரையில் முடக்கப்பட்ட பாதை திறக்கப்படுமா? சிங்கப்பூர் ஆகும் ஸ்ரீரங்கம் தொகுதி!திருச்சியில் அதிரடி திருப்பம்: அரசாங்க நிலங்கள் மீட்புக்காக கிராம சபையில் பட்டதாரி இளைஞரின் அனல் பறக்கும் மனு!

காவிரி கரையோரம் மாயமான 1000 ஏக்கர் காப்புக் காடுகள்! பணக்காரர்கள் வசமா?
அந்தநல்லூர் வருவாய் கிராமம், சர்வே எண் 186 கிட்டத்தட்ட 82ஏக்கர் அரசாங்க புறம்போக்கு நிலம் இருக்கிறது. அதில் 55 ஏக்கர், தனியார் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ளது.

திருச்சி, ஆக. 19: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை கிராமத்தில் உள்ள எலமனூர் பகுதியில் வசித்து வரும் பட்டதாரி இளைஞர் “ராகுல் மணி MBA”,அரசாங்க புறம்போக்கு நிலங்களையும், பாதுகாக்கப்பட வேண்டிய காடுகளையும் மீட்டுப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த ஆகஸ்ட் 15, 2026 அன்று நடைபெற்ற சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் அதிரடியாக மனு அளித்துள்ளார். இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி விடுக்கப்பட்டுள்ள இந்த மனுவின் விவரங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காவிரியில் குளிக்கும் பாக்கியம் பறிபோனது ஏன்? கொதித்தெழும் பொதுமக்கள்!
எலமனூர் “எங்கள் ஊருக்கு எதிரே காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது; ஆனால் எங்களால் காவிரி ஆற்றிற்குப் போய் குளிக்க முடியவில்லை!” என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆற்றிற்குச் செல்லும் பாதை முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கே கரையின் மேல் அமைந்துள்ள பழமையான சிமெண்ட் படிகள் இன்றும் சாட்சியாக உள்ள போதிலும், மக்கள் செல்ல முடியாதவாறு பாதை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, உடனடியாக அந்த மூடப்பட்ட பாதையைத் திறந்து எலமனூர் மக்களுக்கு காவிரியில் குளிக்கும் பாக்கியத்தை மீட்டுத் தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

82 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் 55 ஏக்கர் தனியார் பிடியில்! அதிர்ச்சித் தகவல்!
அந்தநல்லூர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 186 ல் சுமார் 82 ஏக்கர் நிலம், தமிழக அரசாங்க வலைதளத்திலிருந்து பெறப்பட்ட வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை ஆவணங்களின்படி அரசாங்க புறம்போக்கு நிலமாக உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதில் 55 ஏக்கர் நிலம் தற்போது தனியார் நிறுவனத்தின் பயன்பாட்டில் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், திருப்பராய்த்துறையில் உள்ள ராமகிருஷ்ண தபோவனத்திற்குச் சொந்தமான அரசு நிலங்கள், காடுகள், பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள், சுடுகாடு, காவிரி ஆறு, நத்தம், புறம்போக்கு, லைன்கரை உள்ளிட்ட பல்வேறு அரசாங்க நிலங்களிலிருந்து வெறும் 06 ஏக்கர் நிலத்தை மட்டும் அரசு உடனடியாக கையகப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாற்றிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு நிலங்களை மீட்டு ஸ்ரீரங்கத்தில் என்னென்ன வசதிகள் வேண்டும்? அதிரடிப் பட்டியல்!
1.மீட்கப்படும் நிலங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கீழ்க்கண்ட அத்தியாவசிய அரசு மற்றும் சமுதாயக் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது:
2.திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பஞ்சாயத்து செயலருக்கு கழிப்பறை வசதியுடன் கூடிய வீடு மற்றும் அலுவலகம் அமைத்தல்.
3.திருப்பராய்த்துறை ஊராட்சி அலுவலகம், அந்தநல்லூர் வருவாய் ஆய்வாளர் வீடு மற்றும் அலுவலகம்.
4.ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் முனிசிபல் கோர்ட் நீதிமன்ற வளாகங்கள்.
5.ஸ்ரீரங்கம் தொகுதிக்கான அனைத்து அதிநவீன வசதிகளுடன் கூடிய 500 படுக்கை வசதிகள் கொண்ட பிரம்மாண்ட அரசு மருத்துவமனை .
6.அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலகங்கள்.
7.அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம், மின்சார வாரிய அலுவலகம் மற்றும் துணை மின் நிலையங்கள்.
8.அஞ்சலக அலுவலகங்கள் மற்றும் நவீன வங்கி வளாகங்கள்.
9.அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானம் மற்றும் உடற்பயிற்சி கூடம்.
10.எலமனூர் மக்களுக்கு எதிரே காவிரி கரையோரம் மயானம், எரிமேடு சுடுகாடு மற்றும் மின்சார சுடுகாடு அமைத்தல்.
11.சமுதாயக்கூடம், தீயணைப்பு நிலையம், மற்றும் பொதுக் குளியல் இடம் & கழிப்பிட வசதிகள்.
12.திருப்பராய்த்துறை ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை மற்றும் கழிப்பிட வசதியுடன் கூடிய அரசு வீடுகள்.
13.கடந்த 17 ஆண்டுகளாக மின்சாரம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இன்றி காட்டுவாசிகள் போல் வாழ்ந்து வரும் திருப்பராய்த்துறை நந்தவனத்து மக்களுக்கு, நஷ்டஈடாக ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் 10 சென்ட் இலவச வீட்டு மனையும் வீடுகளும் வழங்குதல்.
14.அந்தநல்லூர் ஊராட்சியில் சமத்துவபுரம் இல்லாத குறையைப் போக்க புதிய சமத்துவபுரம் அமைத்தல்.
15.முக்கொம்பு சுற்றுலா தளத்தில் வனவிலங்குகள் பூங்கா, மான் பூங்கா மற்றும் தீம் பார்க் அமைத்தல்.

காவிரி கரையோரம் மாயமான 1000 ஏக்கர் காப்புக் காடுகள்! பணக்காரர்கள் வசமா?
சுற்றுச்சூழலையும் விவசாயத்தையும் பாதுகாக்கக் கோரி மற்றொரு அதிர்ச்சித் தகவலும் மனுவில் இடம்பெற்றுள்ளது. 1927 ஆம் ஆண்டு ரிலீஸ் செட்டில்மெண்ட் பதிவேட்டு மற்றும் வருவாய் துறை ஆவணங்களின்படி, பெட்டவாய்த்தலை முதல் குடமுருட்டி வரை பல வகையான 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட காப்புக் காடுகள் இருந்துள்ளன. ஆனால், 1983 ஆம் ஆண்டிற்கு முன்பே இப்பகுதிகள் பெரிய பணக்காரர்கள் மற்றும் செல்வந்தர்களின் சொந்தமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாக்கும் பொருட்டு, காவிரி கரையோரம் காணாமல் போன இந்த காப்புக் காடுகளில் இருந்து குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலமாவது உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில் வலுவான குரல் எழுப்பப்பட்டுள்ளது.

அரசாங்க புறம்போக்கு நிலங்களையும், இயற்கை வளங்களையும் மீட்கக் கோரி பட்டதாரி இளைஞர் கிராம சபையில் சமர்ப்பித்துள்ள இந்த வீரியமிக்க மனுவானது திருச்சிராப்பள்ளி மாவட்ட வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    முன்னாள் பாரதப்பிரதமர் பாரத ரத்னா அமரர் ராஜீவ்காந்தி பிறந்த தினம்

    அமரர் பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் முரளி அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பட்டேல், செந்தமிழ்செல்வன், கோட்ட தலைவர்கள்…

    திருச்சி மொராய்ஸ் சிட்டியில் பிரம்மாண்டமாகத் தொடங்கிய “மொரைஸ் கார்னிவல்” – பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

    திருச்சி மொரைஸ் சிட்டியில் ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு “மொரைஸ் கார்னிவல்” திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.விழாவின் முதல் நாளான நேற்று (ஆகஸ்ட் 14), மொரைஸ் சிட்டி நிர்வாக இயக்குநர் லெரோன் மொரைஸ் நிகழ்வைத் தொடங்கி…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *